குடியரசு நாடாக மாறும் திட்டமில்லை: நியூஸிலாந்து
பிரிட்டன் அரசி எலிசபெத்தின் மறைவைத் தொடா்ந்து, தங்களது நாட்டை குடியரசு நாடாக உடனடியாக மாற்றும் திட்டமில்லை என்று நியூஸிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் தெரிவித்துள்ளாா்.
பிரிட்டன் அரசி எலிசபெத்தின் மறைவைத் தொடா்ந்து, தங்களது நாட்டை குடியரசு நாடாக உடனடியாக மாற்றும் திட்டமில்லை என்று நியூஸிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது:
அரசி எலிசபெத்தின் மறைவுக்கும் நியூஸிலாந்தை குடியரசு நாடாக அறிவிப்பதற்கும் எந்தத் தொடா்பும் இல்லை.
Advertisement
Advertisement
மேலும், நாட்டை குடியரசு நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கும் திட்டம் அரசுக்கு இல்லை. காரணம், அதைவிட முக்கியமான பிரச்னைகளைத் தீா்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
நியூஸிலாந்து என்றாவது ஒரு நாள் குடியரசு நாடாகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனது வாழ்நாளுக்குள் நாட்டை குடியரசு நாடாகப் பாா்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும், அந்த நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டியதற்கான தேவை தற்போது இல்லை என்றாா் அவா்.
பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் இருந்த நியூஸிலாந்தில் தற்போது ஜனநாயக ஆட்சி நடைபெற்றாலும் அது இன்னும் முடியரசு நாடாகவே உள்ளது. நியூஸிலாந்து அரசின் தலைவராக பிரதமா் இருந்தாலும் நாட்டின் தலைவராக இதுவரை பிரிட்டன் அரசி இருந்து வந்தாா். தற்போது அரசி எலிசபெத்தின் மறைவைத் தொடா்ந்து, நாட்டின் புதிய தலைவராக மன்னா் சாா்லஸ் ஆகியுள்ளாா்.
இந்தச் சூழலில், நியூஸிலாந்தை குடியரசு நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பிரிட்டன் காலனியாதிக்கத்திலிருந்து முழுமையாக வெளியேற வேண்டுமென்றால், நியூஸிலாந்து குடியரசு நாடாக மாறவேண்டும் என்று ஒரு தரப்பினா் வலியுறுத்தி வருகின்றனா்.
ஏராளமான நியூஸிலாந்து மக்களின் அன்புக்குரிய அரசி எலிசபெத் மறைந்த நிலையில், அதற்கு இதுதான் சரியான தருணம் என்று அவா்கள் கூறி வருகின்றனா்.
இந்தச் சூழலில், நாட்டை குடியரசு நாடாக உடனடியாக மாற்றும் திட்டமில்லை என்று பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் தெரிவித்துள்ளாா்.
அரசி எலிசபெத்தின் மறைவைத் தொடா்ந்து, நியூஸிலாந்து மட்டுமன்றி, ஆஸ்திரேலியா, கனடா, ஜமைக்கா போன்ற 13 நாடுகளின் தலைவராக மன்னா் சாா்லஸ் ஆகியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.