முகப்பு
உலகம்

கோத்தபய ராஜபட்ச பதவி விலக தாமதிப்பது ஏன்?

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச நேற்று பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தாமதித்து வருவதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

Updated On : 14 ஜூலை 2022, 8:12 am IST
கோத்தபய ராஜபட்ச(கோப்புப்படம்)
பகிர்:

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச நேற்று பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தாமதித்து வருவதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்து ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இந்நிலையில், ரணிலும், அதிபர் கோத்தபயவும் பதவி விலக வேண்டும் என்று கடந்த வாரம் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, அதிபர் பதவியை ஜூலை 13ஆம் தேதி ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்த கோத்தபய, நேற்று அதிகாலை அன்டோனோவ்-32 என்ற ராணுவ விமானம் மூலம் தனது மனைவி மற்றும் இரு பாதுகாவலர்களுடன் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.

இந்நிலையில், மாலத்தீவில் கோத்தபய இருப்பதை அறிந்த மக்கள் அதிபர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். கோத்தபயவை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றி இலங்கைக்கே அனுப்புமாறு கோரிக்கை வைத்தனர்.

மக்களின் போராட்டத்தை அடுத்து, சிங்கப்பூர் தப்பிச் சென்றதாகவும், அங்கிருந்து துபை செல்லவுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்களில் நேற்று தகவல்கள் கசிந்தன.

ஆனால், பாதுகாப்பு காரணங்கள் கருதி மலேவிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோத்தபய செல்லவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிங்கப்பூர் செல்வதற்காக தனியார் ஜெட் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக கோத்தபய ராஜபட்ச இன்னும் மாலத்தீவில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் பதவியை ராஜிநாமா செய்யாமல் ரணிலை இடைக்கால அதிபராக நியமனம் செய்தது மக்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் பதவி கைவசம் இருந்தால் மட்டுமே உரிய பாதுகாப்புக் கிடைக்கும் என்பதால். ஏதேனும் ஒரு நாட்டில் பாதுகாப்பாக தஞ்சமடைந்த பிறகே ராஜிநாமா கடிதத்தை முறைப்படி கோத்தபய வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.