முகப்பு
உலகம்

லண்டனில் ஆற்றில் மிதந்து வந்த இந்திய மாணவரின் சடலம்..!

லண்டனில் கடந்த மாதம் மாயமான இந்திய மாணவர், தேம்ஸ் ஆற்றங்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
கோப்புப்படம்
பகிர்:

லண்டன் : லண்டனில் கடந்த மாதம் மாயமான 23 வயது இந்திய மாணவர், லண்டன் தேம்ஸ் ஆற்றங்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பிரிட்டனில் உயர்கல்வி பயில்வதற்காக, கடந்த செப்டம்பரில் லண்டன் சென்ற இந்திய மாணவர் மீத்குமார் படேல், கடந்த நவம்பர் 17 ஆம் தேதி திடீரென மாயமானார். இந்த நிலையில், காணாமல் போன மாணவரை குறித்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், கிழக்கு லண்டனில் உள்ள கேனரி வார்ப் பகுதியில்,  தேம்ஸ் நதியில் மாணவரின் சடலம் மிதந்து வந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

உயிரிழந்த மாணவர் மீத்குமார் படேல், பகுதி நேரமாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், சம்பவத்தன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்ற மாணவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே மாணவர் தன் வீட்டுச் சாவியை கதவின் அருகிலேயே வைத்துவிட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இவ்வாறு நடந்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாணவர் மரணத்தில் சந்தேகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை எனவும், மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

மாணவர் மீத்குமார்  படேல் ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவரது உடலை தாயகம் அனுப்பிவைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக இணையதள வழியில் பொதுமக்களிடம் நிதியுதவி திரட்டி வருவாதாகவும்  அவரது உறவினர் பார்த் படேல் என்பவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.