எங்கு சென்றாலும் மரணம் காத்திருக்கிறது!
இஸ்ரேலின் தீவிர தாக்குதலில் நாளுக்கு நாள் பலியாகும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இஸ்ரேல், நகர்ப்புறங்கள் மற்றும் அகதிகள் வாழும் முகாம்களில் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. வான் மற்றும் தரைவழி தாக்குதலை மத்திய காஸாவில் இஸ்ரேல் ராணுவம் விரிவுப்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனர்கள் 21,300 பேர் பலியாகியுள்ளனர். காஸாவின் மக்கள்தொகையில் 85 சதவிகிதம் பேர் ஏற்கெனவே தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்
வியாழக்கிழமை, பெய்த் லஹியே பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெயிர் அல்-பலாஹ் மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் உயிரிழந்த 25 பேரின் உடல்கள் வந்துள்ளன. அவற்றில் குழந்தைகளும் அடக்கம்.
படுகொலை இரவுகள் தொடர்வதாக விவரிக்கும் உள்ளூர் மக்கள், தற்காலிக முகாம்களில் இருந்தும் இடம்பெயரும் சூழல் உருவாகியுள்ளது.
எங்குச் சென்றாலும் மரணம் எனில் வீட்டிலேயே உயிர் போகட்டும் என்று தெரிவித்துள்ளார் புரேஜி அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ராமி அபு மோசப்.
இஸ்ரேல் தரைவழியில் தனது ராணுவ படையை அனுப்புவதற்கு முன்பாக அந்தப் பகுதிகளில் தொடர் குண்டுவீச்சை நிகழ்த்துகிறது.
இத்தனை விரிவான மற்றும் தீவிரமான தாக்குதல் மக்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளைக்கொண்டு சேர்ப்பதில் தடையை ஏற்படுத்துவதாக ஐநா தெரிவித்துள்ளது. காஸாவில் நான்கில் ஒருவர் பசியில் இருப்பதாக அமைப்பு எச்சரித்துள்ளது.