ஆப்கன் இந்திய தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதன் காரணம் இதுதான்!
ஏற்கெனவே தனது தூதரகச் செயல்பாடுகளை நிறுத்தி வைத்திருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் உள்ள ஆப்கன் அரசின் தூதரகம், இந்திய அரசின் ஆதரவின்மையாலும் காபூலில் அதிகாரபூர்வமான அரசின்மையாலும் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே அக். 1 முதல் தூதரக சேவைகளை நிறுத்தியிருந்த நிலையில் அவசர தூதரகச் சேவைகளை மட்டும் ஆப்கன் குடிமக்களுக்கு தூதரகம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த முடிவு, இந்திய அரசின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தூதரகம் தெரிவிக்கிறது.
எனினும், 8 வாரங்கள் கடந்த நிலையில் இந்திய அரசு மற்றும் தலிபான் அரசிடமிருந்து கடும் அழுத்தங்களை எதிர்கொள்வதால் இந்தியாவுக்கான ஆப்கன் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை சார்பில் எந்தப் பதிலும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிக்க: போர் நிறுத்தம் இன்று முதல் தொடங்கும்: கத்தார்
2021-ல் ஆப்கன் ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சியமைத்த தலிபான் அரசை இந்தியா அங்கீகரிக்கவில்லை.
அமெரிக்கா ஆப்கனுக்கான தூதரைத் திரும்ப பெற்ற பிறகு இந்தியாவும் தனது தூதரை காபூலில் இருந்து திரும்ப பெற்றது. ஆப்கனை ஆதரிப்பது தொடர்பாக ஐநாவின் முடிவைப் பின்பற்றவுள்ளதாக இந்தியா முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.