வடக்கு காஸாவில் மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் கடும் தாக்குதல்!
வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
சுமார் 6,000 பேர் தஞ்சமடைந்துள்ள வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
கடந்த அக். 7-ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில் இஸ்ரேலை சோ்ந்த சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச் சென்றனா். இதைத் தொடா்ந்து, காஸா மீது இஸ்ரேல் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக உள்நுழைந்து தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இன்று(திங்கள்கிழமை) ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் மக்கள் பல வாரங்களாக தஞ்சமடைந்துள்ள வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஹமாஸ் தனது போராளிகளை மறைத்து வைப்பதற்கு இந்த இடத்தை பயன்படுத்துவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. மேலும், இந்த மருத்துவமனையில் இருந்து 31 குறைமாத குழந்தைகளை சிகிச்சைக்காக உலக சுகாதார அமைப்பு எகிப்துக்கு அனுப்பியுள்ளது.
இந்தோனேசியன் மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று காஸா தரப்பு கூறுகிறது. மேலும் வெளியில் இருந்து மருத்துவமனையின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் மருத்துவமனை ஊழியர் தெரிவிக்கிறார்.
அந்த மருத்துவமனையில் சுமார் 600 நோயாளிகள், 200 சுகாதாரப் பணியாளர்கள், தஞ்சமடைந்த மக்கள் என சுமார் 6,000 பேர் அங்கு தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் நபரை இஸ்ரேல் ராணுவம் சுடுவதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனையை சுற்றி வளைத்துள்ளதால் அங்கிருந்து மக்களை வெளியேற்ற முடியாத சூழ்நிலை நிலவுகிறது.