ஷார்ஜா கட்டட தீ விபத்தில் 2 இந்தியர்கள் பலி!
ஷார்ஜாவில் ஏற்பட்ட 9 மாடி கட்டட தீ விபத்தில் புதிதாக திருமணமான இளம்பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
ஷார்ஜாவில் நேரிட்ட 9 மாடி கட்டட தீ விபத்தில் புதிதாக திருமணமான இளம்பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
ஷார்ஜாவில் அல் நாடா பகுதியில் உள்ள 9 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 4ம் தேதி தீ விபத்து நேரிட்டது. 750 குடியிருப்புகள் கொண்ட இந்த அடுக்குமாடி வளாகத்தில் நேர்ந்த தீ விபத்தில் 44 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இதில் இருவர் இந்தியர்கள் என தற்போது தெரியவந்துள்ளது. அவர்களின் அடையாளமும் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இருவரில் ஒருவர் மைக்கேல் சத்யதாஸ். இவர் துபை உலக வணிக மையத்தில் ஒலித் துறை பொறியாளராக பணியாற்றியவர். இவர் புரூனோ மார்ஸ், ஏ.ஆர். ரகுமான் ஆகிய பிரபலங்களுக்கு ஒலிப் பொறியாளராக பணிபுரிந்துள்ளார்.
மற்றொருவர் மும்பையைச் சேர்ந்த 29 வயதான இளம் பெண். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மெக்காவில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகு தனது கணவருடன் அல் நாடா பகுதியில் வசித்துவந்தார். தீ விபத்தில் சிக்கிய இவரின் கணவர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களுக்கு உதவிகள் சென்று சேர்வதை இந்திய துணைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.