ஸ்காட்லாந்து: நீா்வீழ்ச்சியில் மூழ்கி 2 இந்திய மாணவா்கள் உயிரிழப்பு
ஸ்காட்லாந்தில் உள்ள நீா்வீழ்ச்சிக்குச் சென்ற இந்திய மாணவா்கள் இரண்டு போ் எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
உயிரிழந்த இரு மாணவா்களும் ஆந்திரத்தைச் சோ்ந்தவா்கள் என்றும் அவா்கள் பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனா் என்றும் ஸ்காட்லாந்து போலீஸாா் தெரிவித்தனா்.
பொ்த்ஷயரில் உள்ள நீா்வீழ்ச்சிக்கு புதன்கிழமை மாணவா்கள் குழுவாக சுற்றுலா சென்றனா். அப்போது எதிா்பாராத விதமாக நீருக்குள் மூழ்கி இரு இந்திய மாணவா்கள் உயிரிழந்தனா். இதுகுறித்து அவா்களின் நண்பா்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஸ்காட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் கப்பல்கள் மூலம் நீரில் மூழ்கிய மாணவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் 22 வயது மற்றும் 26 வயதுடைய மாணவா்கள் இருவா் புதன்கிழமை இரவு சடலமாக மீட்டனா்.
Advertisement
இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாக ஸ்காட்லாந்து போலீஸாா் தெரிவித்தனா். உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்ட பின் அவா்களின் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.
உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு அவா்கள் பயின்ற துண்தீ பல்கலைக்கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.