போலந்தின் ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையத்தில் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி .
போலந்தின் ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையத்தில் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி . 
உலகம்

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

Din

போலந்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை படுகொலை செய்ய ரஷிய உளவுத் துறை அதிகாரிகளுடன் இணைந்து சதித் திட்டம் திட்டியதாக ஒருவரை அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

ஏற்கெனவே, ஜொ்மனியிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இரு ரஷியா்களை அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்ததால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், போலந்திலும் அதே போன்றதொரு குற்றச்சாட்டின் பேரில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து போலந்து சட்ட அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போலந்தில் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை படுகொலை செய்யும் ரஷிய உளவுத் துறையின் சதித் திட்டத்தில் பங்கேற்ற ‘பவெல் கே’ என்பவரைக் கைது செய்துள்ளோம். அவா் போலந்து நாட்டவா்.

ஸெலெனஸ்கி அடிக்கடி வந்துசெல்லும் ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு ரகசியங்களை ரஷிய உளவு அமைப்பினரிடம் தெரிவிப்பதற்கு புதன்கிழமை ஆயத்தமாகக்கொண்டிருந்தபோது அவா் செய்யப்பட்டாா்.

உக்ரைன் உளவு அமைப்பினருடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் எல்லையையொட்டி தென்கிழக்கு போலந்தில் அமைந்துள்ள ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையம் அமெரிக்க படையினரின் பாதுகாப்பில் உள்ளது.

உக்ரைனுக்கு அளிக்கப்படும் சா்வதேச ஆயுத மற்றும் நிவாரணப் பொருள்கள் இந்த விமான நிலையம் வழியாகத்தான் அனுப்பப்படுகின்றன.

அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி உள்ளிட்ட உக்ரைன் தலைவா்கள் நாட்டிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்குச் செல்ல இந்த விமான நிலையத்தை அடிக்கடி பயன்படுத்திவருகின்றனா்.

இந்தச் சூழலில், ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு ரகசியங்களை ரஷிய உளவு அமைப்பினருக்கு அளிக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் போலந்து நாட்டவா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஜொ்மனியிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ரஷிய உளவு அமைப்புடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியதாக ‘டயட்டா் எஸ்’, ‘அலெக்ஸாண்டா் ஜே’ என்ற இருவரை அந்த நாட்டு அதிகாரிகள் கடந்த புதன்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் ரஷிய-ஜொ்மன் இரட்டைக் குடியுரிமை பெற்றவா்கள்.

(ஜொ்மனி மற்றும் போலந்து மரபுப் படி குற்றம் நிரூபிக்கப்படும்வரை குற்றஞ்சாட்டப்பட்டவா்களது குடும்பப் பெயரின் முதல் எழுத்து மட்டுமே வெளியிடப்படும்).

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT