வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, தில்லிக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பான வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தொடர் போராட்டத்தையடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி இன்று அறிவித்துள்ளார்.
பிரதமர் ஷேக் ஹசீனா, தலைநகர் டாக்காவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வெளியேறியதாகவும் C-130 என்ற அந்த விமானம் தில்லியை நோக்கி வருவதாகவும் தகவல்கள் வந்தன.
பாட்னாவை கடந்து உத்தரபிரதேச -பிகார் எல்லையை அடைந்து விமானம் தற்போது தில்லி ஹிண்டன் விமானப்படை தளத்தை அடைந்துள்ளதாகவும் அவர் அங்கிருந்து லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உளவுத்துறை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. தில்லியில் வங்கதேச தூதரகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தாங்குவாரா? என ஏஎன்ஐ ஊடகத்திற்கு பதில் அளித்த வங்கதேசத்துக்கான முன்னாள் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, 'ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1975 முதல் 1979 வரை இந்தியாவில் இருந்தார். இந்தியா பாதுகாப்பான இடம் என்பது மறுப்பதற்கு இல்லை. ஆனால், அவர் எங்கு வேண்டுமானாலும் செல்ல வாய்ப்புள்ளது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.