பிரிட்டன் வன்முறை: வலதுசாரி போராட்டக்காரர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை
போராட்டக்காரர்களை வலதுசாரி குண்டர்கள் என்று கடுமையாக பிரிட்டன் பிரதமர் சாடியுள்ளார்.
பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டு வரும் தீவிர வலதுசாரிகளுக்கு பிரதமர் கியெர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் திங்கள்கிழமை பிரிட்டனில் மூன்று குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.
வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டித்து பிரதமர் கியெர் ஸ்டார்மர் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
“இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்த சந்தேகமே இல்லை. வன்முறையானது சட்டத்தின் முழு பலத்தால் அடக்கப்படும். வன்முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்து வருகின்றனர். அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்.
உங்களின் செயலுக்காக நீங்கள் வருத்தப்படுவீர்கள். இது போராட்டம் அல்ல, குண்டர்களால் திட்டமிடப்பட்ட கலவரம். இதற்கு பிரிட்டனில் இடமில்லை.
தற்போது ஹோட்டலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கதவுகள் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் தங்கியுள்ளவர்களும், ஊழியர்களும் அச்சத்தில் உள்ளனர்.
இஸ்லாமிய சமூகத்தினரையும், மசூதிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. பிற சிறுபான்மையினரும் அச்சத்தில் உள்ளனர். காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த செயலில் ஈடுபட்டவர்களை வலதுசாரி குண்டர்கள் என்று அழைப்பதில் நான் வெட்கப்பட மாட்டேன். தோலின் நிறத்தை காரணமாக கொண்டு ஒருவரை குறிவைப்பது, எவ்வளவு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
இந்த வன்முறைக் கும்பல் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். நாம் அவர்களுக்கு நீதியின் தண்டனை பெற்றுத் தருவோம். நமது காவல்துறையுடன் துணை நிற்போம். குற்றம் குற்றமே. இந்த அரசு இத்தகைய சூழலை சமாளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பிரிட்டனில் கடந்த திங்கள்கிழமை யோகா மற்றும் நடன நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் கத்தியைக் கொண்டு நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும், 11 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே, குழந்தைகள் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தீவிர வலதுசாரிகளான இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக் (ஆங்கிலேயர் தற்காப்பு அமைப்பு) என்ற அமைப்பினர் நடந்திய போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.
இஸ்லாமியர்களையும், புலம்பெயர்ந்தவர்களையும் குறிவைத்து பிரிட்டனின் பல்வேறு நகரங்கள் மற்றும் வடக்கு அயர்லாந்தில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வன்முறை வெடித்துள்ளது.
மேலும், பிரிட்டனின் சௌத்போர்ட் மசூதிக்கு வெளியே நடந்த மோதலை தடுக்க சென்ற காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்கள், பாட்டில்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 400-க்கும் அதிகமானோரை பிரிட்டன் காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.