கொச்சை வார்த்தையால் முதலாளி திட்டியதால், மனமுடைந்த ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக உடனடியாக முதலாளிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
மேலும், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு அவர் மின்னஞ்சல் செய்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ஒரு நிலையான வேலை, நமக்கு பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வைக்கிறது. அந்த வேலையை ஒரு நொடிப்பொழுதில் முடிவு செய்து துறந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர்.
இதேபோன்று சமூக வலைதளம் நமக்குத் தேவையான கருத்துகளை சுதந்திரமாகப் பதிவிட உதவுகிறது. அந்தவகையில் தான் வேலையைத் துறந்ததன் காரணத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பிரபல சமூக வலைதள செயலியான (Reddit) ரெடிட்-ல் தனது முதலாளிக்கு அனுப்பியுள்ள பணி விலகல் மின்னஞ்சலை புகைப்படமெடுத்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், முதலாளி தன்னை தகாத வார்த்தை கூறி திட்டியதால், உடனே இந்த மின்னஞ்சலை அவருக்கு அனுப்பி பணியிலிருந்து விலகியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நான் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகிறேன். சுமூகமாக வேலை செய்ய தனக்கு புதிய கணினி வேண்டும் எனத் தொலைபேசியில் அவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை. நானே கணினியை சரிசெய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை நான் இலவசமாக செய்துகொள்ள முடியாது எனக் குறிப்பிட்டேன். எனக்கு அதற்கு நேரமும் இல்லை.
இதற்குத் தகாத வார்த்தை கூறி, அதைச் செய்துவிட்டு மாற்றிக்கொள் என கட்டளையிட்டார். அதனால் பணியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். இனி ஊழியர்களை இவ்வாறு திட்டுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கிரேசில் ஐரிஷ் என்பவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.