டிரம்ப் சுடப்பட்டதற்கு மோடி கண்டனம்!
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பதிவில் கூறியிருப்பதாவது, ``எனது நண்பரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலை அறிந்து மிகுந்த கவலையடைகிறேன். இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை.
மேலும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், டிரம்ப்பின் காது பகுதியில் லேசாக காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப்பின் ஆதரவாளர் ஒருவர், துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்தார்.