வங்கதேச வன்முறையில் பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு!
ரயில், இணைய சேவைகள் நிறுத்திவைப்பு
வங்கதேசத்தில் வெடித்துள்ள வன்முறையால் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் எழுந்துள்ள வன்முறையில் இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. மேலும், இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி ரயில்கள், மெட்ரோ மற்றும் இணையமும் பாதிக்கப்பட்டதுடன், ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்து எரிக்கப்படடது.
வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வங்கதேசத்தில் இருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் 30 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த இடஒதுக்கீடு அறிவிப்பை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை துவங்கினர். ஆனால், ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வன்முறையாக மாறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்கள், போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், விடுதிகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டை மீண்டும் நிலைநிறுத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரிக்கவுள்ளது. அதுவரையில் மாணவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.