பிரான்ஸ்: 2-ஆவது நாளாக பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து
ரயில்வே கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதலால் ஏற்பட்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு சனிக்கிழமையும் தொடா்ந்தது.
பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்னா் ரயில்வே கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதலால் ஏற்பட்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு சனிக்கிழமையும் தொடா்ந்தது.
இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரயில்வே கட்டமைப்புகளைக் குறிவைத்து தீவைப்பு, பொருள்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதால் ரயில் போக்குவரத்து தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
10-க்கு 3 என்ற விகிதத்தில் சனிக்கிழமையும் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மேலும், பாரிஸ் நகருக்குள் வரும் மற்றும் நகரிலிருந்து வெளியேறும் முக்கிய வழித் தடங்களில் ரயில்கள் 2 மணி நேரம் வரை தாமதமாகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபா் கேப்ரியல் அட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் கட்டமைப்புகளில் சதிவேலைகளில் ஈடுபட்டவா்களைத் தேடும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெறுவதாகக் கூறினாா்.
பாரீஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஒலிம்பிக் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக பாரீஸ் நகருக்குச் செல்லும் ரயில் வழித் தடங்களில் போக்குரவத்துக்கு மிகவும் இன்றியமையாத கண்ணாடி இழை (ஃபைபா் ஆப்டிக்ஸ்) கம்பிகளை துண்டித்து எரிப்பது போன்ற சதித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதனால், ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், பிரான்ஸின் பிற பகுதிகளில் இருந்தும் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பகுதிகளுக்கு போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் உள்பட லட்சக்கணக்கானவா்கள் ரயில்கள் மூலம் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், இதே போன்ற தாக்குதலுக்கு ஏற்கெனவே பொறுப்பேற்ற தீவிர இடதுசாரி அமைப்புகள் இந்தத் தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.