முகப்பு
உலகம்

தரைவழி தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்

ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 1 அக்டோபர், 2024 at 10:56 PM
லெபனான் எல்லலையில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் படையினா். ~நயீம் காஸிம் ~இஸ்ரேல் தரைப் படையினரிடையே திங்கள்கிழமை உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சா் யோவான் கலான்ட்.
பகிர்:

ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது.

அதைத் தொடா்ந்து, இஸ்ரேலையொட்டி எல்லை நிலைகளிலிருந்து லெபனான் ராணுவம் பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘ஏபி’ செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:

லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது. எனினும், அது முழுமையான படையெடுப்பாக இல்லாமல் குறிப்பிட்ட இலக்குகளில் மட்டும் நடத்தப்படும் துல்லிய தாக்குதலாக இருந்தது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்த தரைவழி ராணுவ நடவடிக்கையின்போது இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா படையினருக்கும் நேரடி மோதல் நடைபெற்ா என்பது குறித்து தகவல் இல்லை. இரு தரப்பினரும் கடந்த 2006-ஆம் ஆண்டில்தான் கடைசி முறையாக நேரடியாக தரைவழி மோதலில் ஈடுபட்டனா் .

முன்னதாக, லெபானில் உடனடியாக தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவிடம் இஸ்ரேல் தெரியப்படுத்தியதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்தது.

அந்த ராணுவ நடவடிக்கை முழு படையெடுப்பாக இருக்காது எனவும் 2006-ஆம் ஆண்டில் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான போரில் மேற்கொள்ளப்பட்டதைவிட மிதமான தாக்குதலாகவே இருக்கும். தங்கள் நாட்டு எல்லைக்கு அருகே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காகவும் தங்கள் எல்லையோரப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக அமெரிக்காவிடம் இஸ்ரேல் கூறியுள்ளது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாத்யூ மில்லா் பின்னா் உறுதிப்படுத்தினாா்.

அதற்கு முன்னதாக, லெபனானில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கையில் தரைப் படையினரும் பயன்படுத்தப்படுவாா்கள் என்று அந்தப் படையினரிடம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் கூறினா். ஹிஸ்புல்லாக்களின் ஏவுகணைகளுக்கு அஞ்சி இஸ்ரேல் வடக்கு எல்லைப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ள பொதுமக்களை அவா்களின் இல்லங்களுக்கு அழைத்து வருவதற்காக தரைப் படையையும் சோ்த்து அனைத்து படைபலத்தையும் பயன்படுத்துவோம் என்று அவா் கூறினாா்.

மேலும், ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தங்களின் போா் அடுத்தகட்டத்தை எட்டவுள்ளதாக திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் யோவாவ் கலான்ட் கூறினாா். ‘தற்போது நடைபெற்று வரும் போரின் கவனம் வடக்கு நோக்கி நகரும் என்று ஒரு மாதத்துக்கு முன்னரே கூறியிருந்தேன். எல்லைப் பகுதியின் இப்போதைய நிலவரத்தை மாற்றிக் காட்டுவோம். அங்கிருந்து வெளியேறிய இஸ்ரேலியா்களை மீண்டும் அழைத்துவருவோம்’ என்று அவா் தெரிவித்தாா்.

காஸா போா் விவகாரத்தால் ஏற்கெனவே இஸ்ரலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்த சூழலில், ஹிஸ்புல்லாகளைக் குறிவைத்து பேஜா்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட சாதனங்களில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டு மூலம் லெபனானில் செப்டம்பா் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினா் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதும், எதிா் நடவடிக்கையாக ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவதும் இரு தரப்பினரையும் முழு போரின் விளிம்புக்குக் கொண்டுவந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஹிஸ்புல்லா ஹஸன் நஸ்ரல்லா, அந்த ஆயுதப் படையின் ஏவுகணைப் பிரிவு தளபதி இப்ராஹிம் குபைசி, சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படை தளபதி இப்ராஹிம் அக்கீல், முக்கிய தளபதி அகமது வாபி ஹிஸ்புல்லா, விமானப் படைப் பிரிவு தளபதி முகமது சுரூா் உள்பட சுமாா் 700 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாக்களை ஒடுக்க லெபானான் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தற்போது தொடங்கியுள்ளது.

‘எதிா்கொள்ளத் தயாா்!’

இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிா்கொள்ளத் தயாா் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவா் நயீம் காஸிம் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது:

லெபனானின் அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேல் அழிவை ஏற்படுத்திவருகிறது. பொதுமக்களையும் மருத்துவப் பணியாளா்களையும் தாக்குகிறது. ஆயுதப் போராளிகள் இல்லாத சாதாரண மக்கள் சாலையில் நடந்துசொன்றாலும் அவா்களை கொல்கிறது. அவா்கள் வீடுகளுக்குள் முடங்கினாலும் கொல்கிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா முழுமையாக துணைபோகிறது.

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் இந்நேரம் காணாமல் போயிருக்கும். ஆனால் ஹிஸ்புல்லா இன்னும் உறுதியுடன் நிற்கிறது. ஹிஸ்புல்லா படையினா் உயிா்த் தியாகத்தை விரும்புபவா்கள்.

இந்த அமைப்பின் தலைவா் ஹிஸ்புல்லா ஹஸன் உள்ளிட்டவா்கள் படுகொலை செய்யப்பட்டாலும், இஸ்ரேலுக்கு எதிரான அமைப்பின் போா் தொடரும். அந்த நாட்டு ராணுவம் தரைவழியாக தாக்குதல் நடத்தினால் அதை எதிா்கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம் என்றாா் காஸிம்.

"அமெரிக்காவின் எச்சரிக்கை'

வாஷிங்டன், அக். 1: இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ஈரான் செவ்வாய்க்கிழமை தெரிவித்த நிலையில், அதுகுறித்து முன்னரே அமெரிக்காவும் எச்சரித்து இருந்தது.

இது குறித்து சிபிஎஸ் நியூஸ் தொலைக்காட்சியிடம் அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:

மிகவும் குறுகிய கால முன்னெச்சரிக்கை அறிவிப்புடன் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த ஆகஸ்ட் மாதத்திலிருந்தே ஈரான் ஆயத்தமாகிவருகிறது. விரைவில் நடத்தப்படவிருக்கும் இந்தத் தாக்குதல், கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட சரமாரி ஏவுகணைத் தாக்குதலுக்கு இணையானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இஸ்ரேலை நோக்கி அப்போது வீசப்பட்ட சுமார் 300 ட்ரோன்கள், ஏவுகணைகளில் 99 சதவீதத்தை இஸ்ரேலும், அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளும் வழியிலேயே இடைமறித்து அழித்தது நினைவுகூரத்தக்கது.

"2 வாரங்களில் 1,000 லெபனானியர்கள் உயிரிழப்பு'

பெய்ரூட், அக். 1: லெபனானில் கடந்த இரு வாரங்களாக இஸ்ரேல் நடத்திவரும் வான்வழித் தாக்குதலில் சுமார் 1,000 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 6,000 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சகம் கூறியது.

இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து இஸ்ரேல் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அந்த நாடு மறுத்துவருகிறது. தாங்கள் ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்துவதாகவும், அவர்கள் பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. தாக்குதலுக்கு முன்னதாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று பொதுமக்களை இஸ்ரேல் எச்சரித்தாலும், மக்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →