லெபனானில் நீடிக்கும் சண்டை: இஸ்ரேல் ராணுவ தளபதிகள் மூவர் உயிரிழப்பு!
இஸ்ரேலுக்கு பின்னடைவு.. இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த 8 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்!
லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே சண்டை நீடித்து வரும் நிலையில், தெற்கு லெபனானில் நிகழ்ந்த சண்டையில் இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த தளபதிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதல்களில் காயமடைந்து மரணமடைந்த மேற்கண்ட 3 தளபதிகள் உள்பட இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த 8 வீரர்கள் இன்று(அக். 2) கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 வயதான இஸ்ரேலிய கேப்டன் எய்ட்டன் இட்ஷாக் ஆஸ்டர், ஹிஸ்புல்லா படையினரின் தாக்குதல்களில் இன்று காலை கொல்லப்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து மற்ற வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு லெபானான் பகுதிகளில் ஊடுருவி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில், இஸ்ரேல் படைகளுடன் ஹிஸ்புல்லா ஆயுதப்படையினரும் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரேலை எதிர்கொள்ள ஹிஸ்புல்லா தயாராக இருப்பதாகவும், இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்றும் இஸ்ரேலை எச்சரித்துள்ளார் ஹிஸ்புல்லா செய்தித்தொடர்பாளர் முகமது ஆபிஃப்.
இதனிடையே, லெபனான் எல்லைக்குள் முன்னேறிச் சென்ற இஸ்ரேல் ராணுவத்தினர் சிறிது நேரத்தில் பின்வாங்கிச் சென்றுவிட்டதாக லெபனான் ராணுவம் தெரிவித்துள்ளது.