முகப்பு
உலகம்

பாகிஸ்தான் ஏர்லைனை வாங்கிய ஆரிஃப் ஹபீப்! இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

பாகிஸ்தான் ஏர்லைனை வாங்கிய ஆரிஃப் ஹபீப்புக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

Updated On : 26 டிசம்பர், 2025 at 2:55 PM
பகிர்:

பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை தொழிலதிபர் ஆரிஃப் ஹபீப் வாங்கியிருக்கிறார்.

பாகிஸ்தான் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்வசம் ஆக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு ரூபாயில் 13.5 பில்லியன்கள் கொடுத்து வாங்கியிருக்கிறார் ஆரிஃப் ஹபீப்.

ஒருகாலத்தில் விமானப் போக்குவரத்துத் துறையில் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் பெரும்பங்காற்றி வந்த நிலையில் அந்நாட்டு அரசின் தவறான நிர்வாகம், அலட்சியம் போன்றவை, இன்று அந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இன்றைய மோசமான நிலைக்குக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.

Advertisement

பாகிஸ்தான் பொருளாதாரத்தை ஓரளவுக்கு சீர்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.

இதனை வாங்கியிருக்கும் ஆரிஃப் ஹபீப், 1953ஆம் ஆண்டு கராச்சியில் பிறந்தவர். இவர் பாகிஸ்தான் நாட்டின் மிகப்பணக்கார தொழிலதிபர். தொழில்துறையினரிடையே அதிக ஆதிக்க சக்தி கொண்டவர். இவரது குடும்பம், மிகப்பெரிய நிதிச் சிக்கலை சந்தித்தபோது, கடந்த 1948ஆம் ஆண்டு இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது.

பள்ளிப் படிப்பை 10ஆம் வகுப்புடன் நிறைவு செய்துகொண்டு 1970ஆம் ஆண்டில் தரகு தொழிலுக்குள் நுழைகிறார் ஆரிஃப். இந்த வழியிலேயே தன்னுடைய தொழிலை பல வகைகளில் விரிவுபடுத்துகிறார். தற்போது ஆரிஃப் ஹபீப் குழுமத்தின் தலைமை செயல் நிர்வாகியாக உள்ளார். நிதித் துறை, ரசாயனம், சிமெண்ட், இரும்பு, நிலம் விற்பனை, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் கோலோச்சி வருகிறார்.

ஃபாத்திமா பெர்டிலைசர், ஆயிஷா ஸ்டீல் மில்ஸ், ஜாவேத் கார்ப்பரேஷன் போன்றவை இவரது தலைமையின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த குழும நிறுவனங்கள், பாகிஸ்தானில் அசுர வளர்ச்சி பெறும் நிறுவனங்களின் பட்டியலில் முன்னணி வகிக்கின்றன.

ஆரிஃப் ஹபீப் குடும்பத்தினர், இந்தியாவின் தொழில்முனைவோர்களுடன் மிக நல்ல உறவை பேணி வருகிறார்கள். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்ற சவாலை எதிர்கொண்டபோதிலும், தங்களுடைய சொந்த நாட்டில், ஹபீப் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி, முன்னணி தொழிலதிபராகவும் விளங்கி வருகிறார்.

2020ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில், இந்த நிறுவன விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் தடை விலக்கப்பட்டு, 4 ஆண்டுகளுக்குப் பின் ஐரோப்பிய நாடுகளுக்கு விமானங்கள் பறந்துள்ளன.

நவீன ஏர்லைன்ஸ் நிறுவனமாக அறியப்பட்டு வந்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ், அண்மைக் காலமாக பாதுகாப்புக் குறைபாடு பிரச்னைகளை சந்தித்து வந்தது. நிதி நிர்வாக சீர்குலைவு, செயல்பாடுகளில் குளறுபடிகளால் திணறி வந்தது. இந்த நிலையில்தான், ஆரிஃப் ஹபீப் குழுமம், பாகிஸ்தானில் மிக முக்கிய சாதனையை படைக்கவிருக்கிறது. இந்த குழுமத்தின் வரவால், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் மீது மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

What is the connection between Arif Habib, who bought Pakistan Airlines, and India?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments