மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பயங்கரவாதி தஹவூர் ராணாவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை டிரம்ப் அறிவித்தார்.
மும்பையில் கடந்த 2008, நவம்பா் 26-ஆம் தேதி கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த 10 பயங்கரவாதிகள், சுமாா் 60 மணிநேரம் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கா்கள் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா். தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டாா். அவருக்கு கடந்த 2012-இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவா்களில் ஒருவரான தஹாவூா் ராணா, வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
அவரை நாடு கடத்த அமெரிக்க அரசு கடந்தாண்டு அனுமதித்த நிலையில், இதனை எதிர்த்து ராணா தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், அவரின் மனுக்களை அமெரிக்க நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டன.
தற்போது அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனடியாக நாடுகடத்த ஒப்புதல் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
பயங்கரவாத சதித்திட்டம் தீட்டியவர்களில் ஒருவரும் மும்பை வழக்கில் தொடர்புடையவருமான ராணாவை நாடு கடத்த ஒப்புதல் அளிப்பதில் மகிழ்ச்சி என்றும், அவர் இந்தியாவில் நீதியை எதிர்கொள்ள செல்லவுள்ளார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து பேசிய மோடி, ”பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றது. எல்லையின் மறுபக்கம் உருவெடுக்கும் பயங்கரவாதத்தை உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ராணாவுக்கு இந்திய நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.