ஒரே ஒரு மனைவியை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் நண்பர்களிடமும் கூகுளிலும் உபாயங்கள் தேடிக்கொண்டிருப்பவர்கள், தான்சானியாவைச் சேர்ந்த கபிங்காவைப் பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
கபிங்கா சப்தமே இல்லாமல், தன்னுடைய 20 மனைவிகள், 104 பிள்ளைகளுடனும், 144 பேரக் குழந்தைகளுடனும் ஒரு சிறு கிராமத்தில் மிகவும் அமைதியாக, நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகிறார் கபிங்கா. இவரது குடும்பமே ஒரு கிராமம் போல அழகாக இருக்குமாம். இவரது மனைவிகளில் சிலர் சகோதரிகளாகவும் இருக்கிறார்கள்.
இவரது மனைவிகளில் ஒருவர் கூறுகையில், தங்களது வாழ்முறை பற்றி தனது குடும்பத்துடன் பேசும்போது, எனது தங்கைகளுக்கும், என்னைப் போல வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவர்களும் கபிங்காவையே திருமணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார்.
அண்மையில், ஆப்ரிக்க ஊடகத்தில், கபிங்காவின் நேர்காணல் ஒன்று வெளியானதன் மூலம்தான், இவரது மிக எளிய வாழ்முறை உலக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது இவரைப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.
இவர் ஊடகத்தில் அளித்த நேர்காணலில், தனது வாழ்க்கை மற்ற அனைவரையும் போலத்தான் தொடங்கியது. கடந்த 1961ஆம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அடுத்த ஆண்டே முதல் குழந்தைக்கு தந்தையானேன். அப்போதுதான், எனது தந்தை, கிராமத்தில் மக்கள் தொகை குறைவதை சுட்டிக்காட்டி மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.
தந்தையின் சொல்படி, தான் அதிக பெண்களை மணந்து குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும், தனது முதல் ஐந்து மனைவிகளுக்கும், தனது தந்தைதான் வரதட்சிணை பணத்தைக் கொடுத்து திருமணம் செய்துவைத்ததாகவும் குறிப்பிடுகிறார்.
எப்படி நான் குடும்பத்தை நடத்துகிறேன் என்று மக்கள் பேசிக்கொள்வார்கள். நான்தான் அனைவரையும் கட்டுப்பாட்டுடன் வழிநடத்துகிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல, எனது மனைவிகள்தான், ஒற்றுமையுடன் குடும்பத்தை நடத்துகிறார்கள். நான் வெறுமனே அவர்களுக்கு வழிகாட்டுவேன், அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.
தற்போது கபிங்காவின் 20 மனைவிகளில் 16 மனைவிகள் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள். இவரது 40 குழந்தைகள் பல்வேறு உடல் நலக் குறைவால் உயிரிழந்தவிட்டதாகவும், உயிரோடு இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளில் வெறும் 50 பிள்ளைகளின் பெயர்தான் நினைவில் இருக்கும், மற்ற பிள்ளைகளைப் பார்க்கும்போதுதான் அவர்கள் பெயர்நினைவுக்கு வரும் என்கிறாராம் சிரித்தபடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.