நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி, தனது வெற்றி உரையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய - அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர், நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய - அமெரிக்க மேயராகவும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து மேயரானவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் வெற்றி உரையை நிகழ்த்திய ஸோரான் மம்தானி, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஆகஸ்ட் 14, 1947 அன்று நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய வெற்றி உரையை மேற்கொள்காட்டி, தனது பேச்சை தொடங்கினார்.
“இந்த நொடிப்பொழுது வரலாற்றில் மிக அரிதாகவே வரும். ஒரு வரலாறு முடிவுக்கு வந்து மற்றொரு புதிய வரலாறு உருவாகும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இன்று மௌனம் கலைக்கிறது." என்ற நேருவின் பேச்சை மம்தானி மேற்கோள்காட்டினார்.
அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை நியூ யார்க் மேயர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நகர் முழுவதும் விடியவிடிய மம்தானியின் ஆதரவாளர்கள் அவரின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே கூடியுள்ள ஆதரவாளர்கள் பாலஸ்தீன் விடுதலைக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.