மலேசியா அருகே படகு கடலில் மூழ்கியதில் 100 பேரைக் காணவில்லை!
மலேசியா அருகே படகு கடலில் மூழ்கியதில் 100 பேரைக் காணவில்லை, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரோஹிங்கியா மக்களை ஏற்றிக் கொண்டு வந்த படகு தாய் - மலேசிய கடல் எல்லைப் பகுதியான லங்காவி அருகே கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 100 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெண்கள், குழந்தைகள் என 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், அந்தப் படகில் 100க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், மூன்று நாள்களுக்கு முன்பு மியான்மரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து பல படகுகளில் புறப்பட்ட சுமார் 300 ரோஹிங்கியாக்களின் ஒரு பெரிய குழுவில் இதுவும் ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.
Advertisement
கடலில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. படகில் வந்து கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலேசிய கடல்சார் ஆணையம் தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியாக்கள், பல ஆயிரம் ரூபாய் கொடுத்து, தரகர்கள் மூலம், இந்த மிக அபாயகரமான பயணத்தைத் தொடங்கியதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக ரோஹிங்கியா மக்கள் இதுபோன்ற அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வருவதும், பல விபத்துகளில் சிக்கி ஏராளமான உயிரிழப்புகள் நேரிட்டிருப்பதும் அதிகரித்துள்ளது.