முகப்பு
உலகம்

தாய்லாந்து வெள்ளத்தின் பலி எண்ணிக்கை 162 - பாதுகாக்க முடியவில்லை: மன்னிப்பு கோரிய அரசு!

தாய்லாந்து வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது...

Updated On : 29 நவம்பர், 2025 at 11:06 AM
தாய்லாந்தில் வெள்ளம்
பகிர்:

தாய்லாந்து நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.

இதில், வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் அரசு தோல்வியை ஒப்புக்கொள்வதாகக் கூறி பாதிக்கப்பட்ட மக்களிடம் தாய்லாந்தின் பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் உள்ள சுமார் 8 மாகாணங்களில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு 162 பேர் பலியாகியுள்ளனர்.

இதில், சோங்க்லா மாகாணத்தில் மட்டும் 126 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 14 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதில் 38 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதற்கு, அரசு நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என பலரும் குற்றம்சுமத்தி வந்தனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று (நவ. 29) நேரில் சென்று பார்வையிட்ட தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல், வெள்ள மேலாண்மையில் அரசின் குறைபாடுகளை ஒப்புக்கொண்டதுடன், அரசால் அவர்களைப் பாதுகாக்க முடியவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இத்துடன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் உடனடியாகச் செய்யப்படும் என்றும், விரைவில் இழப்பீடுகள் வழங்கப்படும் என்றும் பிரதமர் அனுடின் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ஹாட் யாய் மருத்துவமனைக்கு ரூ.27.8 கோடி நன்கொடையாக வழங்குவதாக, தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் கூறியுள்ளார். மேலும், வெள்ளத்தில் பலியானவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு அரசின் உதவிகள் மேற்கொள்ளப்படும் என தாய்லாந்தின் மன்னர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிட்வா புயல் பாதிப்புகள் எதிரொலி! இலங்கையில் அவசரநிலை அறிவிப்பு!

summary

The death toll from floods in Thailand's southern provinces has risen to 162.

முழு கட்டுரையைப் படிக்க →