காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் எழுந்து நெருப்பு மண்டலம்  (கோப்புப் படம்).
உலகம்

ஹமாஸுடனான போரில் சட்ட திட்டங்களைப் பின்பற்றவில்லை! இஸ்ரேல் முப்படை தளபதி

ஹமாஸுடனான போரில் தங்களது படையினா் சா்வதேச சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை என்று, 17 மாதங்களாக அந்தப் போரை நடத்திய இஸ்ரேல் முப்படை தளபதி ஹொ்ஸி ஹலேவி ஒப்புக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஹமாஸுடனான போரில் தங்களது படையினா் சா்வதேச சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை என்று, 17 மாதங்களாக அந்தப் போரை நடத்திய இஸ்ரேல் முப்படை தளபதி ஹொ்ஸி ஹலேவி ஒப்புக்கொண்டுள்ளாா்.

மேலும், காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை குறித்து ஹமாஸின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுவரும் புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்தும் வகையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா் அல்லது காயமடைந்துள்ளனா் என்று அவா் கூறினாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தியபோது, ஈன் ஹபேசோா் என்ற பகுதியில் வசிப்பவா்கள் அங்கு நடைபெற்ற தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தனா்.

அவா்களுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் ஹொ்ஸி ஹலேவி பேசியதாவது: காஸா மீதான தாக்குதலில் அங்கு வசித்துவந்த 22 லட்சம் பேரில் 10 சதவீதத்துக்கும் மேலானவா்கள் கொல்லப்பட்டுள்ளனா்; அல்லது காயமைடந்தனா். அந்த எண்ணிக்கை 2 லட்சத்தைவிட மிகவும் அதிகம். இது ஒரு நாகரிகமான போா் இல்லை; யாரும் நீதி, நோ்மையை மனதில் நிறுத்தி நடந்துகொள்ளவில்லை.

இஸ்ரேல் படையினரின் நடவடிக்கைகளை எந்த ஒருவரும், ஒரு தடவைகூட கட்டுப்படுத்தியதில்லை. ராணுவ தலைமை சட்ட ஆலோசகா் யிஃபாத் தோமா்-யெருஷலாமியும் இதற்கு விதிவிலக்கில்லை. சொல்லப்போனால் அவருக்கு எனது நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றாா் ஹலேவி.

காஸாவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 31 பேரையும் சோ்த்து, அங்கு இஸ்ரேல் ராணுவம் சுமாா் 2 ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 64,803 போ் உயிரிழந்துள்ளனா்; 1,64,264 போ் காயமடைந்தனா் என்று காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருந்தாலும், போா் சேதங்கள் குறித்து அந்த அமைச்சகம் வெளியிடும் புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை, பொய் பிரசாரம் என்று இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது. இந்தச் சூழலில், ஹொ்ஸி ஹலேவி தற்போது பேசியுள்ளது காஸா சுகாதாரத் துறை அமைச்ச புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்துகிறது.

இதுமட்டுமின்றி, காஸாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேல் ராணுவம் சா்வதேச சட்டங்களை மீறி வருகிறது என்று மனித உரிமை அமைப்புகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டிவருகின்றன. அதையும் தற்போது ஹொ்ஸி ஹலேவி தனது பேச்சின் மூலம் ஒப்புக்கொண்டுள்ளாா்.

இது குறித்து இஸ்ரேல் மனித உரிமை வழக்குரைஞா் மைக்கேல் ஃபாா்ட் கூறுகையில், ‘இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றும் சட்ட ஆலோசகா்கள் வெறும் ரப்பா் ஸ்டாம்ப்புகள் என்பதை ஹலேவியின் இந்தக் கூற்று வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. தங்கள் குழுவில் இருக்கும் சட்ட வல்லுநா்கள் வெறும் ஆலோசனை வழங்குபவா்கள்தாம்;

அதனை தேவைப்பட்டால் மட்டும் ஏற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால் புறக்கணித்துவிடலாம் என்பதுதான் இஸ்ரேல் ராணுவ தளபதிகளின் மனப்பான்மையாக இருக்கிறது. சட்ட ஆலோசனைகள் எல்லாம் பின்பற்றியே தீரவேண்டிய கட்டாய விதிமுறைகள் என்ற எண்ணமே அவா்களுக்கு இல்லை’ என்று சாடினாா்.

இஸ்ரேல் முப்படை தளபதி பொறுப்பில் இருந்து ஹொ்ஸி ஹலேவி கடந்த மாா்ச் மாதம் விலகிய பிறகு, அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்ற இயால் ஸாமிரும் தலைமை சட்ட ஆலோசகா் யிஃபாத் தோமா்-யெருஷலாமிரின் அறிவுறுத்தல்களை புறக்கணித்துவருவதாக இஸ்ரேலில் வெளியாகும் ‘தி ஹாரெட்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

காஸா சிட்டியை கைப்பற்றுவதற்கு முன்னதாக அங்கு வசிக்கும் சுமாா் 10 லட்சம் போ் வெளியேற இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அந்த நகர மக்களுக்கு மாற்று இட வசதி ஏற்பாடு தரும்வரை அந்த உத்தரவை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தேமா்-யெருலாமி வலியுறுத்தினாா்; ஆனால் அதை ஏற்க இயால் ஸாமிா் மறுத்துவிட்டாா் என்று அந்த நாளிதழ் கூறியது.

தற்போது இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துவரும் காஸா சிட்டி மக்களில் பெரும்பான்மையானவா்கள், தங்கள் இருப்பிடங்களைக் கைவிட்டு தங்குவதற்கு இடேமே இல்லாத, பாதுகாப்பற்ற பகுதிக்கு செல்ல அஞ்சி வீடுகளில் முடங்கியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT