பப்ஜியால் நேர்ந்த கொடூரம்! குடும்பத்தினர் 4 பேரைக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை!
பாகிஸ்தானில் தாய் உள்பட 4 பேரைக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...
பாகிஸ்தானில், கடந்த 2022 ஆம் ஆண்டு பப்ஜி மோகத்தினால் தாய் உள்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்ற சிறுவனுக்கு, இன்று (செப். 24) 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த ஸயின் அலி (வயது 17), எனும் சிறுவன் ஆன்லைன் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி பல மணிநேரம் அந்த விளையாட்டிலேயே கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், தொடர்ந்து பப்ஜி விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துவதாக, ஸயின் அலியின் தாயார் அவரை அவ்வப்போது திட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
இத்துடன், விளையாட்டில் தோல்வியடைந்தால் ஸயின் அலி மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார் என அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சம்பவத்தன்று பல மணிநேரம் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு தோல்வியடைந்ததில் ஆக்ரோஷமாக மாறிய ஸயின் அலியை, அவரது தாயாரும் திட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரது தாயாரின் துப்பாக்கியை எடுத்த ஸயின் அலி, பப்ஜி விளையாட்டைபோல் அறையில் உறங்கிய அவரது தாயார் நஹித் முபாரக் (வயது 45), மூத்த சகோதரர் தைமூர் (20), சகோதரிகள் மஹ்நூர் (15) மற்றும் ஜன்னத் (10) ஆகியோரை சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர், அந்தச் சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, ஸயின் அலிக்கு இன்று லாகூர் நீதிமன்றம், ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள் என 100 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12.6 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிக்க: அதிபர் டிரம்ப்பை சந்திக்க வாஷிங்டன் செல்கிறார் பாக். பிரதமர்!