டிரம்ப் - நெதன்யாகு மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது.
இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து சுமாா் 200 பேரை பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, அதற்கான எதிர்வினையாக இஸ்ரேல் படைகள், காஸாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய தாக்குதல்கள், இன்றளவும் தொடருகின்றன. இதில் இதுவரை 64,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா்; 1,64,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா். இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் காஸா உருக்குலைந்துள்ளது.
இந்த நிலையில், காஸாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட பல கட்ட முயற்சிக்குப்பின், காஸா போர் நிறுத்தத்துக்கான டொனால்ட் டிரம்பின் விரிவான திட்டத்தை இஸ்ரேல் திங்கள்கிழமை(செப். 29) ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்தகட்டமாக, ஹமாஸ் தரப்பின் சம்மதத்தை எதிர்நோக்கி சர்வதேச சமூகம் காத்திருக்கின்றது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று, வெள்ளை மாளிகையில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை(செப். 29) இரவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா போர் நிறுத்தத்துக்காக டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட முக்கியமான 20 நிபந்தனைகளை உள்ளடக்கிய விரிவானதொரு திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, திங்கள்கிழமை நள்ளிரவில் இவ்விரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முதலில் பேசிய டிரம்ப், நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்தவொரு நாள் என்று குறிப்பிட்டார்.
நெதன்யாகு பேசும்போது, இஸ்ரேல் சுட்டிக்காட்டியிருந்த முக்கியமான 5 நிபந்தனைகளை அந்தத் திட்டத்தில் உள்ளடக்கியதைத் தொடர்ந்து, அதனை ஏற்றுக் கொண்டிருப்பதாக் குறிப்பிட்டார். அதில், இஸ்ரேல் தரப்பிலிருந்து குறிப்பிடப்பட்டவை:
இஸ்ரேலிலிருந்து பிணைக்கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களையும் ‘உடனடியாக’ விடுவிக்க வேண்டும்
ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக விடுத்து அமைதிப் பாதைக்குத் திரும்புதல்
காஸா பகுதியில் படைகள் பின்வாங்குதல்
காஸாவின் ‘பாதுகாப்புக்கான பொறுப்பினை’ இஸ்ரேலே தக்க வைத்திருப்பது
ஹமாஸோ அல்லது பாலஸ்தீன நிர்வாகமோ காஸா பகுதியை இனி நிர்வகிக்கக் கூடாது
இந்தநிலையில், காஸா போர்நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்யும் முதன்மை நாடுகளான கத்தாரும் எகிப்தும் ஹமாஸ் தரப்பிடம் மேற்கண்ட அமைதித் திட்டம் குறித்து எடுத்துரைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஹமாஸ் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ல பதிலில், இந்தத் திட்டத்தை சீராய்வு செய்து அதன்பின் நல்லதொரு முடிவை தெரிவிப்பதாக மத்தியஸ்தர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை அறிந்த மற்றும் இவ்விவகாரத்துடன் நெருக்கமாக பின்தொடரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.