ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளது குறித்து...
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஏப். 12) எச்சரித்துள்ளார்.
இதனால், வணிக ரீதியான கப்பல்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் - அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
Advertisement
இந்நிலையில், அணு ஆயுத சோதனையை கைவிடவும், ஹோர்முஸ் நீரிணையில் விதித்துள்ள கட்டுப்பாடுகளை விலக்கவும் கோரி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்.8 ஆம் தேதி அறிவித்தார்.
இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்க குழுக்களை பாகிஸ்தான் வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, சனிக்கிழமை (ஏப்.11) பேச்சுவார்த்தை தாமதமாகத் தொடங்கியது.
சுமார் 21 மணிநேரம் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார். மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ள அமெரிக்காவை நம்பவில்லை என ஈரான் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், ஈரான் எல்லையில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடப்போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்ரூத் சமூகவலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது:
ஹோர்முஸ் நீரிணையை திறப்பதாக ஈரான் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதனை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தது. இதன் விளைவாக உலக நாடுகளிடையே பதற்றம், இடப்பெயர்வு, ஏற்பட்டு பல்வேறு மக்களுக்கு வலி கொடுத்துள்ளது.
ஈரானின் கடற்படை விமானங்களும், கண்ணிவெடி வீசும் விமானங்களும் முழுவதுமாக தகர்க்கப்பட்ட பிறகும் கண்ணி வெடிகளை தண்ணீரில் வீடியதாக அவர்கள் கூறுகிறார்கள். எந்த கப்பலின் உரிமையாளர் இந்த ஆபத்தை ஏற்றுக்கொள்ள முன்வருவார்?
ஈரானின் நற்பெயருக்கு நிரந்தர அவமரியாதை மற்றும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை அவர்கள் விரைந்து திறக்க வேண்டும். புத்தகத்தில் உள்ள அனைத்து விதிகளையும் அவர்கள் மீறியுள்ளனர்.
பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோரின் கனிவான மற்றும் மிகத் திறமையான தலைமையின் கீழ், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சந்திப்பு குறித்து எனது தலைமை நிர்வாகிகளிடம் கூறியுள்ளேன்.
இந்தியாவுடனான மோதல் ஒரு பயங்கரமான போராக மாறியிருந்த சூழலில் 3 முதல் 5 கோடி உயிர்களைக் காப்பாற்றியதற்காக அவர்கள் எனக்கு தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றனர். அதை எப்போதும் பெரிதும் மதிக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.