பெயரளவில் ஈஸ்டர் போர்நிறுத்தம்? ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்!
உக்ரைன் படைகள் சுமார் 2,000 முறை போர்நிறுத்த விதிமீறல்களில் ஈடுபட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
மாஸ்கோ : ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ரஷியா குற்றஞ்சாட்டியது.
ரஷியா, உக்ரைனில் பின்பற்றப்படும் ஆா்த்தடாக்ஸ் கிறிஸ்தவ முறைப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சனிக்கிழமை (ஏப். 11) மாலை 4 மணி முதல் 32 மணி நேர தற்காலிக போா்நிறுத்தத்தை ரஷியா அறிவித்தது. ரஷியாவின் இம்முடிவை உக்ரைன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.
இந்நிலையில், ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷிய படைகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பதாக ரஷியா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்தத் தற்காலிக போர்நிறுத்தம் அமலான முதல் 16 மணி நேரத்தில், உக்ரைன் படைகள் சுமார் 2,000 முறை போர்நிறுத்த விதிமீறல்களில் ஈடுபட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. மாஸ்கோ நேரப்படி, ஏப். 11 மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை உக்ரைன் படைகள் மொத்தம் 1,971 முறை போர்நிறுத்த விதிமீறல் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவற்றுக்கான தக்க பதிலடி அளிக்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, உக்ரைனில் ரஷிய படைகள் பல முறை போர்நிறுத்த விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டிய உக்ரைன், சுமி பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.