பாகிஸ்தானில் 11 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
பாகிஸ்தானில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து...
பாகிஸ்தானில், 11 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் கடந்த ஜன. 8 ஆம் தேதி பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் எனும் அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Advertisement
இதேபோல், குர்ராம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டு நடவடிக்கையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது முதல் பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.