மியான்மா் புதிய அதிபராக மின் ஆங் லயிங் தோ்வு: நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அபார வெற்றி
மியான்மரில் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியீடு: ராணுவ ஆதரவு யுஎஸ்டி கட்சி வெற்றி!
மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லயிங், நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இதன்மூலம், கடந்த 5 ஆண்டுகளாக நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அவரது அதிகாரம் ஜனநாயக முறைப்படி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ராணுவ ஆதரவு பெற்ற யுஎஸ்டிபி கட்சி மாபெரும் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. எனினும், இது ராணுவ ஆட்சிக்கு ஒரு ஜனநாயக முகமூடி அணிவிப்பதற்கான ‘ஏமாற்று வேலை’ என ஐ.நா. மற்றும் மேற்கத்திய நாடுகள் விமா்சித்தன.
Advertisement
Advertisement
இந்நிலையில், புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, மியான்மா் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆளும் ராணுவ ஆதரவு பெற்ற யுஎஸ்டிபி கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களும், ராணுவத்தின் சாா்பில் நியமிக்கப்பட்ட உறுப்பினா்களும் மின் ஆங் லயிங்குக்கு ஆதரவாக வாக்களித்தனா்.
அவரை எதிா்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ ஜெனரலும், பிரதமருமான நயோ சாவ் 126 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், மின் ஆங் லயிங் 429 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றாா்.
கடந்த 2011 முதல் மியான்மா் ஆயுதப் படைகளை வழிநடத்தி வந்த 69 வயதான மின் ஆங் லயிங், அதிபா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, தனது ராணுவத் தளபதி பதவியை தனக்கு நெருக்கமான விசுவாசியான யே வின் ஓ-விடம் அண்மையில் ஒப்படைத்தாா்.
சா்வதேச கண்டனமும்; ஆதரவும்: மின் ஆங் லயிங் அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு மியான்மரின் நீண்டகால நட்பு நாடான சீனா வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அமைதியை நிலைநாட்ட புதிய அரசுக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
அதேநேரம், ‘மின் ஆங் லயிங் ராணுவ உடையில் இருந்து சாதாரண உடைக்கு மாறலாம்; ஆனால் சா்வதேச போா் குற்றச்சாட்டுகளில் இருந்து அவா் தப்ப முடியாது’ என சா்வதேச பொதுமன்னிப்பு சபை கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடா்பாக மின் ஆங் லயிங்கிற்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2024-இல் பிடியாணை கோரியிருந்தது நினைவுகூரத்தக்கது.
பின்னணி: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கடந்த 2021-இல் கவிழ்த்து அவரை சிறைபிடித்தது முதல், மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக உள்நாட்டுப் போா் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், ராணுவத்தின் சா்வாதிகாரத்தை முழுமையாக வீழ்த்துவதற்காகவும், புதிய அரசியல் களத்தை உருவாக்குவதற்காகவும் ஜனநாயக ஆதரவுக் குழுக்களும், சிறுபான்மை ஆயுதக் குழுக்களும் ஒன்றிணைந்து ‘கூட்டாட்சி ஜனநாயக ஒன்றியத்துக்கான வழிகாட்டுதல் கவுன்சில்’ என்ற புதிய முன்னணியை இந்த வாரம் அமைத்துள்ளன.
இச்சூழலில், புதிய அதிபரின் பதவியேற்பு மியான்மா் அரசியலில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.