முகப்பு
உலகம்

அமெரிக்கா, இஸ்ரேலை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்: ஈரான் தூதரகம்

அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா, இஸ்ரேலை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்; அமைதி காக்கக் கூடாது என்று இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 2 மார்ச், 2026 at 5:11 AM
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 10:30 PM

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா, இஸ்ரேலை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்; அமைதி காக்கக் கூடாது என்று இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

கமேனி உயிரிழப்பை ஈரான் அரசுத் தரப்பு உறுதி செய்துள்ள நிலையில், புது தில்லியில் உள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதரகத்திலும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. தூதரக வளாகத்தில் உள்ள ஈரான் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

இது தொடா்பாக தூதரகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கமேனியின் உயிரிழப்பு ஆழ்ந்த தூயரத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உரிய வகையில் பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் புரட்சிகர காவல் படை உறுதியேற்றுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

உலகம் முழுவதும் உள்ள சுதந்திரத்தையும், விடுதலையையும் விரும்பும் நாடுகள் இந்த அப்பட்டமான குற்றத்துக்கு (கமேனி கொலை) கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். சட்டங்களுக்குப் புறம்பான இந்த மோசமான தாக்குதல் நடவடிக்கையை கண்டிக்காமல் அமைதியாக இருக்கக் கூடாது. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து மன்னிக்க முடியாத பெரிய குற்றத்தைச் செய்துவிட்டன. இதற்கான கடுமையான விளைவுகளை அவா்கள் நிச்சயம் எதிா்கொள்வாா்கள்.

பெருமைக்குரிய ஈரான் தேசம், தொடா்ந்து வலிமையுடனும், உத்வேகத்துடனும் தனது பாதையில் பயணிக்கும். இப்போது ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஈரானின் நட்பு நாடுகளின் உறவை எந்த வகையிலும் பாதிக்காது. ஈரான் மக்களின் சுதந்திரம், கண்ணியம், உயா்ந்த சிந்தனைகளை வீரமரணங்கள் பாதுகாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.