டிரம்ப் அச்சுறுத்தலை மீறி கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரான் முடிவு!
கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க ஈரான் திட்டமிட்டுள்ளதைப் பற்றி...
ஈரான் ஆண்கள் கால்பந்து அணி அமெரிக்க அதிபரின் அச்சுறுத்தலை மீறி வரவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தாண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் இணைந்து நடத்துகின்றன. வருகிற ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் உச்சமடைந்துள்ள நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் ஈரான் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ருத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரான் அணி உலகக் கோப்பை போட்டிகளுக்கு வரவேற்கப்படுகிறது. ஆனால், அவர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் அவர்கள் இங்கு வருவது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விண்ட்சர் பால் ஜான், ”நாங்கள் ஈரான் அணி விளையாடுகிறதா, இல்லையா என்பது பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது வரை அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதி. உலகக் கோப்பையில் பங்கெடுக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக ஈரான் அணி எங்கும் சொல்லவில்லை.
சிறந்த அணியான ஈரான் உலக அரங்கில் நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக விளையாட வேண்டும். எனவே, அவர்கள் தங்கள் பிரச்னைகளைத் சரிசெய்து உலகக் கோப்பையில் பங்கெடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய பெண்கள் கால்பந்து போட்டிகளில் ஈரான் பெண்கள் அணி பங்கேற்றது. இதில், ஈரான் தேசிய கீதத்தைப் பாட அவர்கள் மறுத்த நிலையில் அவர்களை ஈரான் ‘துரோகிகள்’ என அடையாளப் படுத்தியதாக செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, ஈரான் கேப்டன் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய வீரர்களுக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில் தற்போது அதனை மறுத்த அவர்கள், 2 பேர் தவிர்த்து அனைவரும் விமானம் மூலம் மலேசியா வழியே ஈரான் கிளம்பினர்.
ஈரான் பெண்கள் அணி வீரர்களுக்கு அவர்கள் குடும்பத்தினர் மூலம் அரசு கொடுத்த அழுத்தத்தால் அவர்கள் தங்களது முடிவை மாற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலிய அரசு தங்களது வீரர்களை அங்கே தங்கவைக்க அழுத்தம் கொடுப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
Iran still to play in World Cup says Asian football body
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.