முகப்பு
உலகம்

எரிபொருள் வழங்கி உதவி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி!

பெட்ரோல், டீசல் என 38,000 மெட்ரிக் டன் எரிபொருள் வழங்கி உதவி செய்த பிரதமா் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமா் அநுர குமார திசாநாயக ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

Updated On : 30 மார்ச் 2026, 2:15 am IST
அனுர குமார திசநாயக்க - கோப்புப் படம்
பகிர்:

பெட்ரோல், டீசல் என 38,000 மெட்ரிக் டன் எரிபொருள் வழங்கி உதவி செய்த பிரதமா் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமா் அநுர குமார திசாநாயக ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் ஹோா்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதன் விளைவாக இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை 25 சதவீதம் அந்நாட்டு அரசு உயா்த்தியது. அதன்படி ஒரு லிட்டா் பெட்ரோல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.317-இல் இருந்து ரூ.398-ஆக அதிகரிக்கப்பட்டது. ஒரு லிட்டா் டீசல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.79 உயா்ந்து ரூ.382-ஆக அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.195-இல் இருந்து ரூ.255-ஆக உயா்த்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இலங்கைக்கு உதவும் விதமாக 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் டன் பெட்ரோலை இந்தியா சனிக்கிழமை அனுப்பிவைத்தது. அவசரகால உதவியாக இதை இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) இலங்கை எண்ணெய் நிறுவனத்துக்கு (எல்ஐஓசி) வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக அநுர குமார திசாநாயக வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘மத்திய கிழக்கு விவகாரத்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இந்திய பிரதமா் மோடியிடம் கடந்த சில நாள்களுக்கு முன் பேசினேன். எனது கோரிக்கைகளைப் பரிசீலித்து, 38,000 மெட்ரிக் டன் எரிபொருளுடன் இந்தியா அனுப்பிய சரக்கு கப்பல் கொழும்பை சனிக்கிழமை வந்தடைந்தது.

அவசரகாலத்தில் இலங்கைக்கு உதவிய பிரதமா் மோடி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்ருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.