ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்கா
ஈரான் எண்ணெய் மீதான வரிக்கு தற்காலிக விலக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது குறித்து...
ஈரான் எண்ணெய் மீதான வரிக்கு தற்காலிக விலக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈரான் மீது விதிக்கப்பட்ட அனைத்து தடைகளையும் நீக்க கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், எண்ணெய் மீதான தடைக்கு மட்டும் அமெரிக்கா தற்காலிக விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஈரானின் தஸ்நிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Advertisement
வாஷிங்டன் - தெஹ்ரான் இடையே இதற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் இருந்து தற்போது நடந்த பேச்சுவார்த்தை முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் ஈரானின் ஒட்டுமொத்த கோரிக்கைகளுக்கு இல்லையென்றாலும், குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கு வாஷிங்டன் செவிசாய்த்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால ஒப்பந்தத்திற்கு வழிவகை ஏற்பட வேண்டுமென்றால், ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும் என ஈரான் தொடர்ந்து வலியுறுத்த உள்ளதாகவும் பேச்சுவார்த்தைக் குழுவில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் கீழ், வாஷிங்டன் அளிக்கும் உறுதிமொழிகளின் ஒரு பகுதியாக, நீக்கப்பட்ட தடைகளின் பட்டியல் இடம்பெற வேண்டும் என ஈரான் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வாஷிங்டன் - தெஹ்ரான் இடையிலான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டப்பட முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு அமெரிக்கா அளித்துள்ள தற்காலிக விலக்கு, பேச்சுவார்த்தை முடிவை எட்டும் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.