கமேனியின் இறுதிச் சடங்கிற்குப் பிறகே அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சு!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் குறித்து...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள் கொல்லப்பட்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பின்னர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து, கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் இருதரப்பினரும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நேற்று (ஜூலை 1) மேற்கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பது, முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு கத்தார் மற்றும் பாகிஸ்தான் அரசுகள் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இதையடுத்து, கத்தார் மற்றும் பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் தனித்தனியாக அமெரிக்கா மற்றும் ஈரான் உடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களை நேர்மறையான முன்னேற்றங்களுடன் நிறைவு செய்துள்ளதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் இன்று (ஜூலை 2) தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரானிய பிரதிநிதிகள் இடையேயான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தை கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பிறகு நடைபெறும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
கடந்த பிப். 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது உடல் ஜூலை 9 ஆம் தேதி மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
next round of indirect talks between the US and Iran will take place following the funeral of the late supreme leader Khamenei.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.