சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மாபெரும் வெற்றிபெறும் என பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தை, நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகின்றனர்.
இதையும் படிக்க| புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகை: பரவும் தகவல்
இந்தப் படத்தையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். டாக்டர் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனும் பிரியங்கா அருள் மோகனும் இணைந்து டான் படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் எஸ்.கே.புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்து வருகின்றன.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, படமாக்கப்பட்ட நாட்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. அதற்காக இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி. டான் திரைப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றிபெறும். பின்குறிப்பு: இன்று இந்தியாவின் டான் அமிதாப் பச்சனின் பிறந்தநாள் என்று குறிப்பிட்டுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் கணிப்பு சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.