'அல வைக்குந்தபுரமுலோ' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக தமன் இருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர உருவாகும் படத்துக்கு தமன்தான் இசையமைப்பாளர். அது மட்டுமல்லாமல், 'ஜிதி ரத்னாலு' பட இயக்குநர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கும் தமனே இசையமைக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படம், மகேஷ் பாபுவின் 'சர்காரு வாரி பாட்டா' என அவர் இசையமைக்கும் படங்களின் பட்டியல் மிக நீளம்.
சமீபத்தில் தீபாவளிக்கு விஷால் - ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்துக்கு பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டார். இதனைப் போலவே நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான டக் ஜெகதீஸ் படத்துக்கும் தமன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் ஒரு பாடல் மற்றும் பின்னணி இசையை கோபி சுந்தர் மேற்கொண்டிருந்தார்.
இதையும் படிக்க | 'எதற்கும் துணிந்தவன்': நாளை புதிய அப்டேட்டுடன் வருகிறார் சூர்யா
தமனுடன் இயக்குநருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே தமன் வெளியேறிவிட்டதாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இசையமைப்பாளர் தமன் மனம் திறந்துள்ளார்.
அதில், ''டக் ஜெகதீஷ்' படத்துக்கு பின்னணி இசையமைத்துவிட்டேன். ஆனால் அது நடிகர் நானிக்கு பிடிக்கவில்லை. அதன் காரணமாகவே அந்தப் படத்தில் இருந்து நான் வெளியேறினேன். நான் என் முழுமனதுடன்தான் அந்தப் படத்தில் பணிபுரிந்தேன். எங்கே தவறு நடந்தது என்று தெரியவில்லை'' என்று விளக்கமளித்துள்ளார்.