பாரதி கண்ணம்மா: கடுப்பேத்துறாங்க மை லார்ட்!

கண்ணம்மா மீது யாரோ கண் வைத்துவிட்டார்களோ என்னவோ இப்போதெல்லாம் அடிக்கடி பார்வையாளர்களை ரொம்பவேதான் கடுப்பேற்றுகிறார்கள்.
படம் - twitter.com/vijaytelevision
படம் - twitter.com/vijaytelevision

விஜய் டிவியில் பரவலான வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாகச் சென்றுகொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா.

கண்ணம்மா மீது யாரோ கண் வைத்துவிட்டார்களோ என்னவோ இப்போதெல்லாம் அடிக்கடி பார்வையாளர்களை ரொம்பவேதான் கடுப்பேற்றுகிறார்கள். ஒருவேளை இப்படியெல்லாம் காட்சிகள் இருந்தால்தான் தொடர் தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

பாருங்கள், கடைசியாக வந்தவற்றில், கண்ணம்மா வீட்டுக்கு சௌந்தர்யா வருகிறார். விவாகரத்து படிவத்தில்  கண்ணம்மா கையெழுத்திடும் நேரம். வாங்கிப் பார்த்து யார் இதைச் செய்யச் சொல்வதெனக் கேட்கிறார் சௌந்தர்யா.

இதையொட்டி இரண்டு எபிசோட்களில் நடந்த பேச்சுகளின் முடிவில் உணர்ச்சிவசப்பட்ட ஒரு கணத்தில் கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை ஹேமாதான் என்று சொல்லிவிடுகிறார் சௌந்தர்யா. பெரிய அதிர்ச்சி கண்ணம்மாவுக்கு.

ஆனாலும், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் விவாகரத்து நடைபெற வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுத்துவது யார் என்பதை அறிவதில் முனைப்பாக இருக்கும் சௌந்தர்யா, மீண்டும் மீண்டும் கண்ணம்மாவைக் கேட்கிறார். வெண்பாதானே என்றும் ஊகித்துக் கூறுகிறார்.

இதனிடையே, ஏறத்தாழ முக்கால் எபிசோட் ஒரு காட்சி.

காவல்துறையினரைத் தொலைபேசியில் அழைத்த  சௌந்தர்யா, இன்னும் சிறிது நேரத்தில் ஒரு கொலை நடக்கப் போகிறது என்றும் அந்த முகவரியையும் தெரிவிக்கிறார், வெண்பா வீட்டின் முகவரி.

அடுத்துப் பார்த்தால் வெண்பா வீட்டில், இருவருக்கும் இடையே ஆவேசமான அனல் தெறிக்கும் நீண்ட  உரையாடல். கடைசியாகத் துப்பாக்கியை எடுத்து வெண்பாவைக் குறிபார்த்துக்கொண்டே வேறு பேசுகிறார் சௌந்தர்யா.

வெண்பாவைச் சுடப் போகும்போது திடீரென, பாரதியைப் பெறுவதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறிக்கொண்டே, சௌந்தர்யா கையைப் பிடித்து முறுக்கித் துப்பாக்கியைத் திருப்பி அவரையே சுட முயலுகிறார் வெண்பா.

இந்தத் தள்ளுமுள்ளுவின் முடிவில் வெண்பாவைத் துப்பாக்கியால் நெற்றிக்கு அருகே சுட்டுவிடுகிறார் சௌந்தர்யா. காவல்துறையினர் வருகின்றனர். இறந்தவரைப் போலவே கிடக்கிறார் வெண்பா.

சௌந்தர்யாவைக் கைது செய்து எல்லாருமாக வெளியேறும்போது, விழித்தெழுந்த வெண்பா, மறுபடியும் துப்பாக்கியை எடுத்து சௌந்தர்யாவைச் சுடுகிறார். இதைப் பார்த்த கண்ணம்மாவோ குறுக்கே புகுந்து மறிக்கிறார்.

அடடே, கதை எங்கோ போகிறதே என நினைத்துக் கொண்டிருந்தால், பழையபடி, ஏற்கெனவே பாரதி திருந்திய கதையைப் போலவேதான் இதுவும். எல்லாமே கண்ணம்மா நினைத்துப் பார்க்கிறதுதானாம்.

எனவேதான், வெண்பா பெயரை சௌந்தர்யாவிடம் சொல்லத் தயங்குகிறாராம். மறுபடியும் விட்ட இடத்திலிருந்து. அடேயப்பா.

இப்படியிருந்தால் எப்படி இருக்கும்? என்று கதை விவாதங்களில் சொல்வார்கள் அல்லவா, இப்போதெல்லாம் அதையும்  எடுத்துப் பார்த்துத் தொடரிலும் இணைத்துவிடுகிறார்கள் போல.

அனேகமாக இந்த எபிசோடைப் பார்த்து எரிச்சலடையாத பார்வையாளர்களே இருந்திருக்க மாட்டார்கள். ம். நன்றாகப் போய்க்கொண்டிருக்கிற தொடரில் இன்னும் என்னென்னவெல்லாம் வரப் போகிறதோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com