இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத்திப் படமான ‘செலோ ஷோ’வில் நடித்த 10 வயது குழந்தை நட்சத்திரம் புற்றுநோயால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சார்பாக சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக 95வது ஆஸ்கர் விருதுக்கு குஜராத்தி இயக்குநர் பான் நிலன் இயக்கத்தில் உருவான ‘செலோ ஷோ’ (The last film show- Chhello Show) படம் சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
குஜராத்தின் சிறிய கிராமத்திலிருக்கும் சிறுவனுக்குள் ஏற்படும் திரைப்படம் மீதான காதலைப் பற்றியதே இப்படம்.
இந்நிலையில், இப்படத்தில் மனு என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ராகுல் கோலி என்கிற 10 வயது சிறுவன் ரத்தப் புற்றுநோயால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் 4 மாதங்களாக புற்றுநோயின் பாதிப்பில் இருந்து வந்துள்ளார். சில நாள்களுக்கு முன் கடுமையாக ரத்தவாந்தி எடுத்ததும் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காததால் ராகுல் உயிரிழந்ததாக அவர் தந்தை கூறியுள்ளார்.
இதையும் படிக்க: 'வாரிசு' படத்துடன் போதும் 'துணிவு'? வெளியான புதிய அப்டேட்
மேலும், வருகிற அக்.14 ஆம் தேதி இப்படம் குஜராத் மாநிலத்தில் வெளியாக உள்ள நிலையில், அப்படத்தைப் பார்க்காமலே அச்சிறுவன் உயிரிழந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் படத்தில் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமலி, ரிச்சா மீனா, திபன் ராவல், பரேஷ் மேக்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
‘செலோ ஷோ’ 2021இல் டிரிபிகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அக்.2021இல் வல்லடோலிட் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று கோல்டன் ஸ்பைக் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
95-வது ஆஸ்கர் விருது 2023 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் மார்ச் 12 ஆம் நாள் நடைபெற உள்ளது.