இயக்குநர் பாலா இயக்கி வந்த வணங்கான் திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி உள்ளார். இத்தகவலை அப்படத்தின் இயக்குநர் பாலாவே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் பாலா வெளியிட்ட அறிக்கையில்,“வணக்கம், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
இதையும் படிக்க- சிம்பு குரலில் ‘தீ தளபதி’ பாடல் வெளியானது!
எனவே 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.
நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்கான்' படப்பணிகள் தொடரும்”. இவ்வாறு அதில் குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது.
படத்தின் படப்பிடிப்பும் ஏப்ரல் மாத துவக்கத்தில் கன்னியாகுமரியில் சில நாள்கள் நடைபெற்றது.
ஆனால், வணங்கான் படப்பிடிப்பு முடிவதற்குள் சூர்யா தன் அடுத்த படத்தில் நடிக்கச் சென்றார். இதனால் சூர்யாவுக்கும் பாலாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக ஏற்கெனவே ஒரு முறை தகவல் வெளியானது. ஆனால் இத்தகவலை மறுத்து தயாரிப்பு தரப்பு அப்போது செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.