கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரில் இரு பாகங்களைக் கொண்ட திரைப்படமாகத் தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் செப். 30-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமா்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்தது.
உலகெங்கிலும் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இதுவரை ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. படம் பெரு வெற்று பெற்றதால் மறைந்த எழுத்தாளா் கல்கி கிருஷ்ணமூா்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழுமத் தலைவா் சுபாஸ்கரன், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளா் மணிரத்னம் ஆகியோா் இணைந்து ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 4 முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியானது.
படத்தின் வெற்றி காரணமாக குறிப்பிட்ட தேதிக்கு முன்னமே அடுத்தாண்டு கோடையில் படம் வெளியாக போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் ரசிகர்களும் இந்த செய்திக்குதான் காத்திருக்கிறார்கள்.