வெளியானது பொன்னியின் செல்வன்: ரசிகர்கள் கொண்டாட்டம்
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.
படத்தின் முதல் காட்சி இன்று காலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. அதிகாலை முதலே தியேட்டர் வளாகத்தில் குவிந்த ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் வைத்து, மேள தாளத்துடன் கொண்டாடினர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ள நடிகர் ஜெயம் ரவி சென்னை வெற்றி திரையரங்கில் திரைப்படம் பார்த்தார்.