பிரபல நடிகை மிருணாள் தாக்குர் ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.
மராத்தி படங்களில் அறிமுகமான நடிகை மிருணாள் தாக்குர் தமிழ் ரசிகர்களுக்கு சீதா ராமம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த இந்தத் திரைப்படம் பான் இந்தியப் படமாகவும் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.
இதற்கடுத்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்தும் மிருணாள் தாக்குர் புகழ் பெற்றார். தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் மிருணாள் தாக்குர் நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் படம் வரும் ஏப்ரல் 5ஆம் நாள் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஃபேமிலி ஸ்டார் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மிருணாள் தாக்குர் பேசியதாவது:
ஊனமுற்றவர்கள் போலிருக்கும் நிலைமையில் நான் இருக்க விரும்பவில்லை ஏனெனில் எனக்கு தெலுங்கு மொழி தெரியாது. அது என்னை மிகவும் தொந்தரவு செய்தது. அதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை கைவிட நினைத்தேன். நிஜமாகவே மனதுக்குள் அழுதுவிட்டேன். ஆனால், எனது ஒவ்வொரு கண்ணீர் துளியும் எனக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தன.
காஷ்மீரில் சீதாராமம் படப்பிடிப்பின்போது துல்கரிடம் ‘சீதா ராமம்தான் எனது முதலும் கடைசியான தெலுங்கு படம். வேறெந்த படமும் தெலுங்கில் செய்வதாக இல்லை’ எனக் கூறினேன். அதற்கு துல்கர் என்னைப் பார்த்து, ‘பார்த்துக் கொள்ளலாம்’ என்றார். அவர் கொடுத்த நம்பிக்கைதான் இன்று தமிழ், கன்னட மொழிகளிலும் நடிக்கிறேன் என்றார்.
தெலுங்கு, தமிழில் ஃபேமிலி ஸ்டார் படமும் ஹிந்தியில் பூஜா மேரி ஜான் படமும் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.