தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன.
அர்ஜுன் ரெட்டி புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அனிமல்’ படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
ராஷ்மிகா மந்தனா நடிகர்கள் அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய், ரன்பீர் கப்பூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்திய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஆங்கில நேர்காணல் ஒன்றில் பேசிய ராஷ்மிகா, “என்னால் வெற்றியை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது. என்னைவிட அழகான திறமையான பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு கிடைத்த வாய்ப்பினால் நான் இப்போது இருக்கும் இடத்தினை நினைத்து பெருமைப்படுகிறேன். கடந்த சில வருடங்களாக நான் அடைந்த வெற்றிகளை வெறுமனே எடுத்துகொள்ள முடியாது. அதை நான் எனது உழைப்பினால் சம்பாதித்துள்ளேன். அதற்காக நன்றியுணர்வுடன் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இந்தியாவின் நேஷ்னல் க்ரஷ் என்றழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ராகுல் ரவீந்திரா இயக்கியுள்ள கேர்ள்பிரண்டு படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் ராஷ்மிகா பிறந்தநாளில் அந்தப் படத்தின் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.