நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார்.
முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், படத்திற்கு புறநானூறு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். படத்தின் பெயரை அறிவிக்கவில்லை.
இதையும் படிக்க: இந்தியன் - 2 படப்பிடிப்பு நிறைவு!
படத்தின் அறிவிப்பு விடியோவில் போராட்டம், மக்கள் கூட்டம், ரேடியோ, பழைய ரக துப்பாக்கி, ஒலிவாங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளதால் இப்படம் அரசியலை மையப்படுத்தி 1970 - 80களில் நடக்கும் பிரியடிக் படமாக (period film) உருவாக வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது.
இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதையும் கூறியுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா படத்தை முடித்த பின், இதன் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கான பாடல் உருவாக்க பணிகள் துவங்கியுள்ளது. படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் பாடகி தீயை ஒரு பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. சுதா கொங்காராவுடன் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.