ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் தனியார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் கரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்த தனியார் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் சிக்கிய கரோனா நோயாளிகளை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக லப்பிப்பேட்டையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஜயவாடா தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கல் செய்தியில், “விஜயவாடாவில் கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் தீ விபத்தில் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
கரோனா சிகிச்சை பெற்று வந்தவர்கள் தீ விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.