கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து சேவை மார்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து சேவை மார்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் 75 மாவட்ட எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
அதேபோன்று நாடு முழுவதும் மார்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் மெட்ரோ ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.
முன்னதாக, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.