77 சாலை விதிமீறல்களுக்கு ரூ.42,500 அபராதம் விதித்து, இரண்டு மீட்டர் நீள ரசீதை போக்குவரத்துக் காவலர் கொடுத்ததும், வாகனத்தை போக்குவரத்துக் காவலரிடமே விட்டுவிட்டு, இளைஞர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
பெங்களூருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அருண் குமார், தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும் போது இப்படி தான் ஒரு தலைப்புச் செய்தியாக மாறுவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஏற்கனவே ஒருவர் பயன்படுத்திய வாகனத்தை வாங்கிப் பயன்படுத்துவோருக்கு இது சற்றுக் கலக்கத்தையும் ஏற்படுத்தலாம்.
சரி நேராக செய்திக்கு வருவோம், அருண் குமார் ஓட்டி வந்த வாகனத்தின் எண் பலகையில் முறைகேடு மற்றும் வாகன ஓட்டி தலைக்கவசம் அணியாமல் வந்தது என இரண்டு சாலை விதிமீறல்களுடன் சேர்த்து பழைய சாலை விதிமீறல்களுக்கான அபராதத்தையும் போக்குவரத்துக் காவலர்கள் கூட்டினர்.
இதையும் படிக்கலாமே.. வரலாற்றின் பக்கங்களிலிருந்து: இந்திரா காந்தி கொல்லப்பட்டார்: காவலாளர்களே சுட்டனர்
மிகச் சரியாக அருண் குமார் ஓட்டி வந்த வாகனத்தின் எண்ணில், 77 சாலை விதிமீறல்களும், அதற்கான அபராதத் தொகையாக ரூ.42,500ம் வந்தது. இதில், சாலை சந்திப்புகளில் நிற்காமல் சென்றது உள்ளிட்டவையும் அடங்கும். இரண்டு மீட்டர் நீளம் கொண்ட அபராத ரசீதை அருண் குமாரின் கையில் கொடுத்ததும், அவருக்கு லேசாக ரத்தக் கொதிப்பு கூடி குறைந்திருக்கலாம்.
ஆனால், அருண் குமாருக்கு அப்போது வேறு வழியே தெரிந்திருக்கவில்லை. போக்குவரத்துக் காவலரிடம் வண்டிச் சாவியைக் கொடுத்துவிட்டு, இந்த வாகனமே ரூ.30 ஆயிரத்துக்குத்தான் விலைபோகும். இதற்கு ரூ.42,500 அபராதம் செலுத்த முடியுமா? என்று கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
போக்குவரத்துக் காவலர் ஷிவராஜ்குமார் அங்காடி, வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளார். அபராதத்தை செலுத்துமாறு அருண் குமாருக்கு நோட்டீஸ் அனுப்புவோம். ஒரு வேளை அவர் பதிலளிக்கவில்லை என்றால், இந்த வாகனத்தை ஏலத்துக்கு விட்டுவிடுவோம் என்று கூறியுள்ளார்.