அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டார்.
வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டு விமான தளத்திற்கு சென்றடைந்த அவருக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அமெரிக்க அரசின் சார்பில் மூத்த அலுவலர்கள், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் மோடியை வரவேற்றனர். இதுகுறித்து மோடி சுட்டுரை பக்கத்தில், "வாஷிங்டனில் உற்சாகமான வரவேற்பு அளித்த இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புலம்பெயர் இந்தியர்களே நமது பலம். உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் மேம்பட்டிருப்பது பாராட்டத்தக்கது" என பதிவிட்டுள்ளார்.
புது தில்லியிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது நீண்ட விமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்டு கையெழுத்திடுவது, முக்கிய திட்டங்கள் குறித்த தகவல்களை ஆய்வு செய்வது உள்ளிட்டப் பணிகளை மேற்கொண்டிருந்தார். இது குறித்த புகைப்படமும் அவரது சுட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில், மன்மோகன் சிங், பிரதமராக இருந்த போது வெளிநாட்டுப் பயணங்களின் போது செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறி மூன்று புகைப்படங்களையும் வெளியிட்டு, சில புகைப்படங்களை நகலெடுக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே.. விமானத்திலிருந்து விழுந்த ஒரு சிறு புள்ளி.. அதன் பின்னாலிருக்கும் மிகப்பெரிய சோகம்
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பெற்றதிலிருந்து ஏழாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ள மோடி, "அமெரிக்காவுடனான வியூக ரீதியான கூட்டணி இப்பயணத்தின் மூலம் வலுப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
வாஷிங்டனில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்திக்கவுள்ளார். ஆப்கன் விவகாரம் அதன் தாக்கங்கள், சீனாவின் ஆதிக்கம், தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அமெரிக்க - இந்திய கூட்டணியை மேலும் விரிவுப்படுத்துவது எப்படி போன்ற வி்வகாரங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.
ஜோ பைடன் நடத்தும் கரோனா உலகளாவிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா தெரி்வித்திருந்தார்.