'கேஜரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் போராட்டம் தொடரும்' - தேஜஸ்வி சூர்யா

காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தங்களின் போராட்டம் தொடரும் என பாஜக எம்.பி. கூறியுள்ளார். 
'கேஜரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் போராட்டம் தொடரும்' - தேஜஸ்வி சூர்யா
Updated on
1 min read

காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தங்களின் போராட்டம் தொடரும் என பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார். 

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் தாக்கிப் பேசினார். மேலும், 'படத்திற்கு வரிவிலக்கு எதற்கு? யூ ட்யூபில் வெளியிடுங்கள். அனைவரும் பார்க்கட்டும்' என்று கூறியிருந்தார். இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்ததுடன் நேற்று பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

கேஜரிவாலின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்தன. பின்னர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அரவிந்த் கேஜரிவாலை கொல்ல பாஜகவினர் முயற்சி செய்வதாக கூறியுள்ளார். 

இந்நிலையில், பாஜக எம்.பி.யும் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவருமான தேஜஸ்வி சூர்யா, காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்கும்வரை தங்களின் போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளார். 

'அரவிந்த் கேஜரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் எப்போதுமே இந்திய மற்றும் இந்து விரோத கொள்கைகளை பின்பற்றி வருகின்றன. ராமர் கோயிலை கேலி செய்கிறார்கள், இந்து கடவுள்களை கேலி செய்கிறார்கள், பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் பற்றி கேள்விகளை எழுப்புகிறார்கள், பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த கேள்விகளை எழுப்புகிறார்கள். கேஜரிவால் எப்போதுமே இந்த அற்ப அரசியலை மேற்கொள்கிறார். அரசியல் நலனுக்காக பொய் கூறுகிறார்' என்றும் தேஜஸ்வி சூர்யா குற்றம்சாட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com